இந்தக் கேள்வியில் இரண்டு நிலைகள் காணப்படுகின்றன. முதலாவது, அரபு மொழி தெரியாத ஒருவர் குர்ஆனின் தமிழாக்கத்தை அல்லது வேறு மொழியின் மொழிபெயர்ப்பைப் படிப்பது. குர்ஆன் என்பது அரபு மொழியில் அருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். அதனை அருளப்பட்ட அதே அரபு மொழியில் ஓதினால் மட்டுமே ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் நன்மைகள் கிடைக்கும். மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது குர்ஆனைக் கற்ற நன்மை கிடைக்குமே தவிர, குர்ஆனை ஓதிய நன்மை கிடைக்காது.
இரண்டாவது நிலை, சிறு வயதில் கற்றுக் கொள்ளாத காரணத்தினால் அரபு எழுத்துக்களை வாசிக்கத் தெரியாதவர்கள், குர்ஆனின் அரபு மூலத்தைத் தமிழ் எழுத்துக்களில் (Transliteration) எழுதிக் கொண்டு வாசிப்பதாகும். உதாரணமாக, "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்பதைத் தமிழில் எழுதி வாசிப்பது. இவ்வாறு தமிழ் எழுத்துக்களில் வாசிப்பவர்கள், தற்காலத்தில் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய சரியான கிராஅத் ஆடியோக்களைக் கேட்டு, உச்சரிப்புப் பிழையின்றிச் சரியாக ஓதுவார்களாக இருந்தால், அவர்களுக்குக் கண்டிப்பாக குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்கும். ஆனால், அரபு உச்சரிப்பைத் தவறாகத் தமிழில் ஓதினால் (உதாரணமாக, ''கலக்கல் இன்சான'' என்பதை ''கலக்கல்'' என்று தவறாக உச்சரித்தால்) நன்மை கிடைக்காது; மாறாக அது தவறாகும்.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனைக் கற்றுக்கொள்வதையும் ஓதுவதையும் இலகுவாக்கியுள்ளான். எனவே, அரபு வாசிக்கத் தெரியாதவர்கள் தாழ்வு மனப்பான்மையோ வெட்கமோ இன்றி, சரியான முறையில் அரபியிலேயே குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.