ஜக்காத் பெறத் தகுதியான எட்டு கூட்டத்தினரில் மிஸ்கீன், ஃபக்கீர், கடன்காரர்கள் ஆகியோர் எப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு ஜக்காத் நிதியிலிருந்து கொடுக்க மார்க்கம் வழிகாட்டியுள்ளது. ஆனால், வட்டிக்குக் கடன் வாங்கியவர் வட்டி கட்டுவதற்காகவோ அல்லது அடமானம் வைத்த நகையை மீட்பதற்காகவோ ஜக்காத் கேட்கும்போது அவருடைய நிலையை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.
அவர் வட்டிக்கு வாங்கியது பாவம் என்று உணர்ந்து, வருத்தப்பட்டுத் தவ்பா செய்துவிட்டு, அதிலிருந்து மீள்வதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்றால், அவருக்கு ஜக்காத் பணத்தில் இருந்து கொடுக்கலாம். ஆனால், நகையை மீட்டெடுக்க ஜக்காத் பெற்ற பிறகு, மீண்டும் தேவை வரும்போது அந்த நகையைக் கொண்டு போய் வட்டிக்கு அடகு வைப்பார் என்ற நிலை இருந்தால், அத்தகையவர்களுக்கு ஜக்காத் கொடுக்கக் கூடாது. "நன்மையான விஷயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள், பாவமான காரியங்களில் ஒத்துழைக்காதீர்கள்" என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் இதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.