Dr. ஷேக் முபாரக் மதனி

பொருள் ஒன்றினை வாங்கி அதனுடைய விலை அதிகரிக்கும் வரை காத்திருந்து விற்பனை செய்வது கூடுமா? (பொருட்களை பதுக்கி வைக்கலாமா?)

வியாபாரம் உணவு

← முந்தையஅடுதது →
கேள்வி
பொருள் ஒன்றினை வாங்கி அதனுடைய விலை அதிகரிக்கும் வரை காத்திருந்து விற்பனை செய்வது கூடுமா? (பொருட்களை பதுக்கி வைக்கலாமா?)
பதில்
பதில்:

இஸ்லாத்தில் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்பட்ட மற்றும் ஆர்வமூட்டப்பட்ட ஒரு ஹலாலான தொழிலாகும். சாதாரணமாகப் பொருட்கள் சந்தையில் மலிவாகக் காணப்படும் காலத்தில், அவற்றை வாங்கி வைத்து விலை அதிகரிக்கும்போது விற்பனை செய்வது மார்க்கத்தில் கூடும் என்று உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் பொருள் தட்டுப்பாடுகள் நிலவுகிற போது, அந்தப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்காகவோ அல்லது விலை அதிகரித்ததும் அதிக விலைக்கு விற்பதற்காகவோ பொருட்களை மறைத்து வைப்பது இஸ்லாத்தில் ''பதுக்கல்'' (Hoarding) என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

பதுக்கல் வியாபாரம் செய்வது இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, "பொருட்களைப் பதுக்குபவன் பாவியைத் தவிர வேறு இல்லை" என்று கூறினார்கள். வேறு சில ஹதீஸ்களில், அப்படிப் பதுக்குபவன் அல்லாஹ்வினால் சபிக்கப்படுகிறான் என்றும், அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்து அவன் விடுபடுகிறான் என்றும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹராமான முறையில் பொருளீட்டி அந்தப் பணத்தில் உண்பதும், உடுப்பதும் கூடாது. ஹராமான உணவை உண்டவரின் பிரார்த்தனைகள் (துஆக்கள்) எக்காலத்திலும் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டாது. நாளை மறுமையில் நம்முடைய பொருளாதாரம் எப்படி வந்தது, எப்படிச் செலவு செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் ஒரு அடியான் தன் பாதங்களை அசைக்க முடியாது.

தட்டுப்பாடுகள் நிலவும் காலத்தில் பொருட்களைப் பதுக்கி வைத்து, மக்களுக்குச் சிரமத்தைக் கொடுத்து, அநியாயம் இழைத்து சம்பாதிப்பதை விட, கையேந்திப் பிச்சை எடுப்பது சிறந்தது. அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் வியாபாரிகளைப் பார்த்து, "நிச்சயமாக வியாபாரிகள் மறுமையில் பாவிகளாகவே எழுப்பப்படுவார்கள்; அல்லாஹ்வை அஞ்சி, தக்வாவோடும் உண்மையோடும் வியாபாரம் செய்தவர்களைத் தவிர" என்று எச்சரித்துள்ளார்கள். அதேநேரம், வாங்கும்போதும் விற்கும்போதும் தாராளத் தன்மையோடு விட்டுக்கொடுத்து நடப்பவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்றும் பிரார்த்தித்துள்ளார்கள். எனவே, பதுக்கல் என்பது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டிய ஹராமான ஒரு செயலாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →