நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "எந்த குழந்தையும் பிறக்கிற போது இஸ்லாமிய இயல்போடு (இயற்கை தன்மையோடு) தான் பிறக்கிறது. அதனுடைய பெற்றோர் தான் அதனை யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ மாற்றுகிறார்கள்". இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து மாற்று மதத்தவர்களின் குழந்தைகள் மரணித்தால் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா என்கிற கேள்வி பிறந்திருக்கிறது.
\nஉண்மையில் இந்த விஷயத்தை ஆய்வு செய்யக்கூடிய உலமாக்கள் மிக முக்கியமான ஒரு விதியை குறிப்பிடுகிறார்கள். இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவஸியா (ரஹ்) அவர்கள் தன்னுடைய ''ஷிபாஉல் அலீல்'' என்கிற புத்தகத்திலே சொல்லும்போது "காஃபிர்களுடைய பிள்ளைகள் உலக விவகாரங்களில் அந்த காஃபிரான தந்தைகளுக்குரிய சட்டத்தையே பின்பற்றுவார்கள்" என்று கூறுகிறார்கள். அப்ப உலக விஷயத்தை பொறுத்தவரையில் அவர்கள் காஃபிர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் காஃபிரான பெற்றோருக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் மரணித்தால் ஜனாஸா தொழுகை அவர்களுக்கு நடத்த முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
\nஅதே நேரத்தில் மறுமையில் அவர்களுடைய நிலையை பொறுத்தவரையில் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா மறுமையிலே ஒரு சோதனையை வைத்து அவர்களை அந்த சோதனையின் அடிப்படையில் தீர்மானிப்பான் என்கிற கருத்தை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தை சேர்ந்த உலமாக்கள் முன்வைத்திருக்கிறார்கள். பொதுவாக காஃபிர்களுடைய குழந்தைகள் இந்த உலகத்தில் பெற்றோரை போன்றே பார்க்கப்பட வேண்டும் என்பது உலமாக்கள் சொல்லக்கூடிய அடிப்படையாக இருந்து கொண்டிருக்கிறது.