உழ்ஹிய்யா கொடுக்கும் போது, தனக்கும் தன் குடும்பத்திலுள்ள உயிருள்ளவர்கள் மற்றும் மரணித்தவர்கள் அனைவருக்கும் சேர்த்துப் பொதுவான நிய்யத்தில் கொடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும். மரணித்தவர் உழ்ஹிய்யா கொடுக்குமாறு மரண சாசனம் (வஸிய்யத்) செய்திருந்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.
ஆனால், வஸிய்யத் செய்யாத நிலையில் மரணித்த தந்தை அல்லது தாய்க்கெனப் பெயரைக் குறிப்பிட்டுப் பிரத்தியேகமாக உழ்ஹிய்யா கொடுப்பது குறித்து அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. நபி (ஸல்) அவர்கள் தம் மனைவி கதீஜா (ரலி) அல்லது சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) போன்றவர்களுக்காகக் குறிப்பாக உழ்ஹிய்யா கொடுத்ததில்லை என்பதால், மரணித்தவர்களைக் குறிப்பாக்கி உழ்ஹிய்யா கொடுப்பதைத் தவிர்த்து, பொதுவான நிய்யத்தில் குடும்பத்தினரோடு அவர்களை இணைத்துக்கொள்வதே மிகச் சிறந்ததாகும் என ஷேக் உஸைமீன் (ரஹ்) போன்ற அறிஞர்கள் விளக்குகின்றனர்.