இஸ்லாமிய மார்க்கம் என்பது சிறந்த ஒழுக்க விழுமியங்களையும் நற்பண்புகளையும் கட்டி எழுப்புவதற்காக வந்த மார்க்கமாகும். நல்ல பண்பாடுகளைப் பூரணப்படுத்துவதற்காகவே தான் அனுப்பப்பட்டுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில், மனைவியோடு தாம்பத்தியத்தில் ஈடுபட்டுவிட்டு அதனை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வது ஒழுக்க விழுமியங்களுக்குப் புறம்பான, மிக மோசமான செயலாகும்.
இது குறித்து ரசூல் (ஸல்) அவர்கள் கூறுகையில், "நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தன் மனைவியோடு சேர்ந்துவிட்டு அதைப் பற்றித் தன் நண்பர்களோடு பகிர்ந்துகொள்பவன்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்கள் (முஸ்லிம்). மற்றுமொரு சந்தர்ப்பத்தில், இதை ஒரு சைத்தான் தெருவில் இன்னொரு சைத்தானோடு புணர்ந்துவிட்டு மற்றவர்களோடு பகிர்வதற்கு ஒப்பாகக் கண்டித்துள்ளார்கள். எனவே, தாம்பத்திய அந்தரங்கங்களை மற்றவர்களிடம் பகிர்வது இஸ்லாத்தில் வன்மையாகத் தடைசெய்யப்பட்ட அசிங்கமான பாவமாகும்.