அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சில விஷயங்களில் வித்தியாசப்படுத்திப் படைத்திருக்கிறான். ஆண்களின் முகங்களில் மீசை மற்றும் தாடி வளர்வது இயற்கையான படைப்பமைப்பாகும். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களது முகத்தில் மீசையோ தாடியோ வளர்வது கிடையாது. அதேபோல அவர்களுடைய கைகள் மற்றும் கால்களில் உரோமங்கள் இல்லாத நிலையிலேயே அல்லாஹ் அவர்களைப் படைத்திருக்கிறான்.
ஆண்களைப் பொறுத்தவரையில், தாடியை வளர்க்க வேண்டும், மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அதேபோல, ஆண், பெண் இருபாலரும் அக்குள் மற்றும் மர்மஸ்தானங்களில் முளைக்கக்கூடிய உரோமங்களை அகற்ற வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.
ஒரு பெண்ணுக்கு முகத்தில் மீசையோ அல்லது வேறு உரோமங்களோ முளைத்தால் அவற்றை அகற்றுவதில் எந்தத் தடையும் இல்லை என்பதே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் தீர்ப்பாகும். அதேபோன்று கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உரோமங்கள் முளைத்தால் அவற்றை அகற்றுவதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை என அநேகமான அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், பெண்கள் தங்கள் கண்புருவங்களை அகற்றுவதையோ அல்லது திருத்தி அமைப்பதையோ ரசூல் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். கண்புருவத்தை அகற்றும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர். எனவே கண்புருவத்தை அகற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து, முகத்தில் முளைக்கும் தேவையற்ற உரோமங்களையோ அல்லது மீசையையோ அகற்றுவதில் எவ்விதத் தவறுமில்லை.