குனூத்துன் நாஸிலா என்றால் முஸ்லிம் சமுதாயத்திற்குப் பிரச்சினைகள், சோதனைகள், கஷ்டங்கள் வரும்போது ஓதுவதற்காக வேண்டி ரசூல் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு வழிமுறையாகும். ரசூல் (ஸல்) அவர்களின் காலத்தில் சில சஹாபாக்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள்; சில சஹாபாக்கள் பலவீனப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களைக் காப்பாற்றுமாறும், எதிரிகளுக்கு எதிராகவும் அல்லாஹ்விடத்திலே ரசூல் (ஸல்) அவர்கள் குனூத்துன் நாஸிலா ஓதினார்கள். அந்தக் குறிப்பிட்ட பிரச்சினை முடிந்ததும் குனூத்துன் நாஸிலா ஓதுவதையும் நிறுத்திக் கொண்டார்கள். எனவே, பிரச்சினைகள் ஏற்படும் போது குனூத் ஓதுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
இதனை ஜமாஅத்தாகத் தொழக்கூடிய ஃபர்ழான தொழுகைகளில் ஓதுவதுதான் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். சுன்னத்தான தொழுகைகளில் ஓதலாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், ஃபர்ழான தொழுகைகளில் ஓதலாம் என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. அதிலும் சத்தமிட்டு ஓதக்கூடிய தொழுகைகளான மஃரிப், இஷா, சுபஹ் போன்ற தொழுகைகளில் இறுதி ரக்அத்தின் ருகூவிற்குப் பிறகு கையேந்தி இந்தக் குனூத்தை இமாம் ஓதுவார்; பின்னால் இருக்கக்கூடிய மஃமூம்கள் ஆமீன் சொல்வார்கள். இதுவே சிறந்ததாகும்.
இன்றைய காலத்தில் வழமையாக ''அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த...'' என்ற குனூத்தையே நாஸிலாவாக ஓதுவதைக் காண்கிறோம்; இது நபிவழியல்ல. குனூத்துன் நாஸிலா என்பது எந்தப் பிரச்சினைக்காக ஓதுகிறோமோ அந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு ஓதக்கூடிய ஒரு பிரத்தியேகமான குனூத்தாகும். மேலும், இதனை ஒரு கூட்டாக, முஸ்லிம் சமுதாயம் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒருங்கிணைந்து செய்வதுதான் மிகவும் ஆரோக்கியமானதாகும். பிரச்சினை தீர்ந்தவுடன் அந்தத் தலைமைத்துவத்தின் வழிகாட்டலின்படி அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.